Sunday, May 15, 2005

இழப்பு!!!!!!!


இழப்பு!!!!!!!

உறவினை இழக்கையில்,
உள்ளம் உறங்கிப் போகும்......
உணர்வுகளின் கொந்தளிப்பில்,
உதடுகள் கூட ஊமையாகிடும்......

நெஞ்சுக் குழிக்குள்ளே,
நிஜங்களைத் தொலைத்துவிட்ட
நினைவுப் போராட்டம்....
நிழலாய் தொடரும்.....

கனவுகளும் கூட,
கற்பனைகள் இல்லாமல்,
கலங்கிப்போய்,
கண் மூடி கிடக்கும்....

கண்களில் கண்ணீரும்,
காய்ந்து போய் விடும்......

இரவுகளுக்கும், பகல்களுக்கும்,
இடைவெளியே இல்லை,
இரவிலும் உறக்கமில்லை,
இருளே பகலிலுமாய்,

மனம் விரும்பாவிட்டாலும்,
மௌனம் நம்மை,
தனதாக்கிக் கொள்ளும்....

மண்டியிட்டு மௌனம்
மனதுக்குள் உட்கார்ந்து
மங்காத நிகழ்வுகளை
மலை போல காட்டும்....

பரிச்சயமற்ற மௌனத்தால்,
பாறாங்கல்லாய்,
பாரம் ஏறும்...
உடலிலும், உணர்விலும்,

விழுதலில் இருந்து,
எழுவதற்காய்,
மௌனத்தை கேட்க வேண்டும்....
ஏ... மௌனமே பேசி விடு!!!!!