Sunday, May 15, 2005

உனைக் கண்ட நாள் முதலாய்....

உனைக் கண்ட நாள் முதலாய்....

ஊனில்லை,
உறக்கமில்லை - என்
உயிர் கூட என் வசமில்லை...
உனைக் கண்ட நாள் முதலாய்...

பார்வையிலே பரவசம்,
பழக்கத்திலே நவரசம்,
கலந்து வந்த கலவையாய்,
காதலின் பிரசவம்.....

சுற்றியுள்ளோர் எவரும்,
சுத்தமாய் தெரியவில்லை,
நினைவுகளை எல்லாம் - நீ
நிறைத்தாய் முழுவதுமாய்....

அதிசயமாய் மொட்டு விட்ட கவிதைகள்,
அழகழகாய் மலர்ந்தன கனவுகளில்....
காலை உதிக்க முன்னே
கண் விழிப்பு
உனை நேரில் காண்பதற்காய்.....
மாலை மங்கும் முன்பே,
கண்ணயரத் துடிதுடிப்பு
உனை கனவுகளில் பார்ப்பதற்காய்.....

உதடுகளில்
உன் பெயரின்
உச்சரிப்பு ஓயாமல் ஓயாமல்.....

மனதினிலோ
மௌனமாய் ராகங்கள்
முணுமுணுப்பாய் முணுமுணுப்பாய்.....

முட்டி முட்டி
மோதுகின்ற உணர்ச்சிகள்
நெஞ்சினிலே எப்போதும்,
நீங்காமல் நீங்காமல்.....

தூரத்தில் நீ இருக்கும் வேளைகளில்
தொடுகையே இல்லாத சிலிர்ப்பும்,
தூக்கத்தில் நீ வரும் நேரங்களில்
தொடுதலில் உண்டாகும் களிப்பும்....

வார்த்தைகள் வசப்படாமல்
வருந்தி நிற்கும் தவிப்பும்,
மணிக் கணக்காய் பேசும்போது
மனம் நிறையும் பூரிப்பும்.....

மடல்களில் நீ வரையும்
வண்ணக் கோலங்கள்,
மனம் உருகி நீ சொல்லும்
வார்த்தை ஜாலங்கள்,
எனக்கும் உனக்குமாய்
நீ போடும் பாலங்கள்....

உணர்ச்சிக் கொந்தளிப்பில்
ஊடல்களின் நர்த்தனமும்,
உள்ளங்களின் சங்கமத்தில்
உறவின் நிரந்தரமும்....

நிழல்களும் நீயாய்,
நிஜங்களும் நீயாய்,
நீயே நானாய்,
நானே நீயாய்,
நாமாகிப் போனோம்...

உனைக் கண்ட நாள் முதலாய்....................