Friday, August 05, 2005

உன் கை பிடித்து......


உன் கை பிடித்து
நான் எழுந்து
என் முதலடியை
எடுத்து வைத்தேன்
உன் கைகள்
எந்தனுக்குசெய்துவிட்ட
சேவைகளோ ஏராளம்

விளையாடிக் களைத்து நான்
வியர்வையில் குளித்து வந்தால்
முந்தானை எடுத்து என்
முகம் துடைத்தாய்

மழையில் நனைந்து வந்தால்
மார்பில் சளி பிடிக்குமென்று
தாயே நீ ஓடி வந்து
தலை துடைத்தாய்

நான் விரும்பும் இடமெல்லாம்
நாளும் நீ அலுக்காமல்
அன்பாய் அரவணைத்து
அழைத்துச் செல்வாய்

காயங்கள் எனக்கு வந்தால்
கருத்துடனே மருந்திடுவாய்
வாடாமல் நான் நின்றாலும்
வலி தெரியும் உன் முகத்தில்

என் கை பிடித்து
ஏட்டில் நீ எழுத வைத்தாய்
என் கரம்பற்றும் கணவரிடம்
ஏக்கமுடம் அனுப்பி வைத்தாய்

உன் கைகள் எந்தனுக்கு
செய்துவிட்ட சேவைகளோ ஏராளம்
நான் உனக்கு சேவை செய்யும்
சந்தர்ப்பம் வந்திடுமா????